அலங்காநல்லூரில் தடையை மீறி காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு- இளைஞர்கள் பெரும் உற்சாகம்!!
அலங்காநல்லூரில் தடையை மீறி காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
மதுரை: உச்சநீதிமன்ற தடையை மீறி மதுரை அருகே அலங்காநல்லூரில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாட்டுப் பொங்கலான நேற்று மதுரை பாலமேடு உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தடையை மீறி உணர்ச்சி பெருக்குடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தடியடி- கைது
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட ஒரு சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். பல இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவியும் இளைஞர்கள்
இந்த நிலையில் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் அலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தவும் விரைந்துள்ளனர்.
போலீஸ் குவிப்பு
இதனால் மதுரையில் இருந்து அலங்காநல்லூர் வழியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட போலீசாரும் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்பு கொடி போராட்டம்
அலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து குவிவதை தடுக்க வழியெங்கும் சோதனை சாவடிகள் போடப்பட்டுள்ளன. இதனிடையே அலங்காநல்லூரில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்சகட்ட பதற்றம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக கோயில் காளைகளுக்கு அலங்காநல்லூர் மக்கள் பூஜை நடத்தினர்.
வாடிவாசலுக்குள் அனுமதி மறுப்பு
வழக்கமாக கோயில் காளைகளுக்கு பூஜை நடத்தியபின்னர் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்படும். ஆனால் தற்போது வாடிவாசலுக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும் நிலை இருக்கிறது. இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
30 பேர்
இதனிடையே அலங்காநல்லுரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வாடிவாசலை யாரும் நெருங்கிவிடமுடியாத படி போலீசார் அரணமைத்து பாதுகாப்பில் நின்று வருகின்றனர்.
திடீர் ஜல்லிக்கட்டு
இதனிடையே திடீரென போலீசாரை ஏமாற்றிவிட்டு அலங்காநல்லூர் மைதானத்தில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று இறக்கிவிடப்பட்டது. சிறிது நேரம் களமாடிய ஜல்லிக்கட்டு காளையை கண்டு அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து காளைகள் சீறிப் பாய்ந்தன. வாடிவாசல் வழியே அல்லாமல் மைதானத்தில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.