நோன்பு வைத்த மாணவர்களை கட்டாயப்படுத்தி கசாயம் குடிக்க வைத்த பள்ளி: பெற்றோர் போராட்டத்தால் பதட்டம்
திருச்சி: திருச்சியில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் நோன்பு வைத்திருந்த முஸ்லீம் மாணவர்களை கட்டாயப்படுத்தி நிலவேம்பு கசாயம் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருச்சியில் உள்ள புனித ரெடீமீர் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் முஸ்லீம் மாணவ, மாணவியர் புனித ரமலான் நோன்பு இருந்து வருகிறார்கள். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நோன்பு வைத்துவிட்டு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் வாயில் ஆசிரியர்கள் நிலவேம்பு கசாயத்தை ஊற்றி குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாணவ, மாணவியருக்கு மாநகராட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. தேவாலய வளாகத்தில் உள்ள அந்த பள்ளியில் நோன்பு வைத்த மாணவர்களுக்கு கசாயம் கொடுக்கப்பட்டதை அறிந்த 100 பெற்றோர்கள் அங்கு வந்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
பெற்றோர் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நிலவேம்பு கசாயம் அளிக்கும்படி கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தான் மாவட்ட வாரியாக கசாயம் அளிக்கப்பட்டு வருகிறது.