விராலிமலை ஜல்லிக்கட்டு விழாவில் வன்முறை.. 52 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் குவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், அங்கு கலவரம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அனுமதியும் போலீசாரிம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று திடிரென்று ஜல்லிக்கட்டு நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர். ஆனாலும் போலீசார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவில்லை.
இதனால் நேற்று மாலை முதல் இரவு 9 மணி வரை பல இடங்களில் சாலை மறியல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன். இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கல் வீசியதில் 5 போலீசாரின் வாகன கண்ணாடி உடைந்து, போலீசார் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மேலும் பதட்டம் நிலவுகிறது.