சகோதரிகள் தற்கொலை விவகாரம்: அரவிந்தர் ஆசிரமம் மீது தி.க.வினர் கல், செருப்பு வீச்சு- 50 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டித்து, திராவிடர் கழகத்தினர் ஆசிரமத்தின் மீது கற்கள் மற்றும் செருப்பு உள்ளிட்டவற்றை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் சிறு வயதில் முதல் இருந்து வந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் நிவேதிதா ஆகிய 5 சகோதரிகள். அதில் ஹேமலதா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கடந்த 2002ம் ஆண்டு அவர் மீது ஆசிரமம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதற்கு பதிலடியாக ஆசிரமம் மீது சகோதரிகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
பாலியல் புகாரை மறுத்த ஆசிரம நிர்வாகம், சகோதரிகளை வெளியேற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடியது. அதன்படி, சகோதரிகள் 5 பேரும் ஆறு மாத காலத்திற்குள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நேற்றுடன் உச்ச நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்த நிலையில், ஆசிரமத்தை விட்டு வெளியேற மறுத்த சகோதரிகள் தற்கொலைக்கு முயற்சித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றினார்கள். பின்னர் 5 சகோதரிகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
ஆசிரமத்தை விட்டு வெளியேறிய அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். இதில் அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் அவர்களின் தாய் பலியானார்கள். மீதமுள்ள 3 சகோதரிகள் மற்றும் தந்தையை காப்பாற்றியவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரவிந்தர் ஆசிரமம் மீது கற்கள் மற்றும் செருப்பை வீசி இன்று தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம வளாகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் ஆசிரமத்துக்கு சொந்தமான பல்பொருள் அங்காடியும் சூறையாடப்பட்டது. தாக்குதலைத் தடுக்க முற்பட்ட போலீசாருக்கும், தி.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக 50 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர் . இந்த சம்பவங்களால் அரவிந்தர் ஆசிரமப் பகுதி பதற்றம் நிலவுகிறது.