திருவாரூர் அருகே ஒஎன்ஜிசி குழாயில் உடைப்பு!
திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Recommended Video
திருவாரூர் : திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடம்பங்கடி பகுதியில் புதிய கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், மாணவர்கள் போராடி வரும் நிலையில் எருகாட்டூரில் ஓஎன்ஜிசி குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்களுக்கு நடுவே எண்ணெய் குழாய் அமைத்து மீத்தேன் எடுக்கும் பணிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்து வருகிறது. ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களாலேய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் ஒஎன்ஜிசி எண்ணெய்க் குழாய்களால் நிலத்தடி நீர் மாசுபட்டு, நீர் பயன்படுத்த முடியாத நிலைக்கு போவதாக பொதுமக்கள் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக திருவாரூர் மாவட்டம் கடம்பங்குடியில் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு தளவாடங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை கண்டித்து பெண்கள், பள்ளி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் எருகாட்டூரில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே இது போன்று குழாயில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிவால் விளை நிலம் பற்றி எரிந்த நிலையில், எருகாட்டூர் பகுதியில் எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டுள்ளது அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.