விடைபெற்றார் ரோசய்யா.. அரசு மரியாதையுடன் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்
சென்னை: தமிழக ஆளுநர் பதவிக்காலம் முடிந்ததும் விடைபெற்ற ரோசய்யாவை அமைச்சர்கள் அவரது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு வழியனுப்பி வைத்தனர்.
ஆந்திர மாநில முதல்வராக இருந்தவர் ரோசய்யா. பல காலம் ஆந்திர நிதியமைச்சராக திறம்பட செயல்பட்டவரும் கூட. மூத்த காங்கிரஸ்வாதியான ரோசய்யா கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ந் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார்.
2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்ததும், முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் பதவி விலகினார்கள். சிலர் மட்டும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் அப்போது கே.ரோசய்யா நீக்கப்படவில்லை. தொடர்ந்து தமிழக ஆளுநராக நீடித்தார்.
இந்நிலையில், அவரது 5 ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவிக்காலம் நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை. அத்துடன், மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் வந்த வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவிக்காலம் முடிந்து பொறுப்புகளை புதிய ஆளுநரிடம் ஒப்படைத்த ரோசய்யா, இன்று தமிழக மக்களிடம் இருந்து விடைபெற்று சென்னையில் விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டு, வழியனுப்பி வைத்தனர். வழியனுப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, சீனிவாசன், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.