பயங்கரவாதிகளுக்கு கன்னியாகுமரியில் பயிற்சி.. பொன் ராதா பேச்சால் பரபரப்பு
நாகர்கோவில்: பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஆந்திராவில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக பயிற்சி அளிக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் உள்பட பல இடங்களில் இந்த பயிற்சி முகாம் நடக்கிறது. சட்டம் ஓழுங்கு சம்பந்தமாக மாநில அரசுகள் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடக்க அரசு முன் வரவேண்டும். இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி குறைந்தபட்சம் 10 நவோதயா பள்ளிகளையாவது தமிழகத்திற்கு கொண்டு வர வேணடும்.
சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது மிகவும் பாராட்டுகுரியது. திறமையாக செயல்பட்டு குற்றவாளியை அடையாளம் கண்டறிந்துள்ளனர். தமிழக போலீசார் திறமையானவர்கள்தான். ஆனால் குறுக்கீடு இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஜக்கு மாற்றப்பட்டுள்ளது" என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.