ஊழலைப் பற்றி கனிமொழி பேசலாமா?- தா பாண்டியன்
சென்னை: ஊழலைப் பற்றியோ அதை ஒழிப்பது குறித்தோ பேசத் தகுதியற்றவர் கனிமொழி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் தா பாண்டியன் கூறியுள்ளார்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.பத்மநாபனை ஆதரித்து உக்கடம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவர் பிரசாரம் செய்கையில் பேசியதாவது:
மத்தியில் இரண்டாண்டு காலம் ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யாத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தை மீட்கப் போவதாக கூறுகிறார். மேலும், மோடி பதவி ஏற்ற பின்னர்தான் இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் வன்முறைக் களங்களாக, சாதி துவேஷ மையங்களாக மாறியுள்ளன.
இந்த நிலையைத் தமிழகத்திலும் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தபோதுதான் கோவை மாநகருக்கு சிறுவாணி தண்ணீர் கிடைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. அதனால் இந்த நகரில் குடிநீர்ப் பிரச்னை பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்து வந்தது. அதற்கும் தற்போதைய ஆட்சியாளர்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை வரக் காரணமே நம் முன்னோர்கள் வெட்டி வைத்த குளங்களையும், ஏரிகளையும் அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமித்ததுதான்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் கனிமொழி ஊழல் ஒழிப்பு குறித்துப் பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை என கூறி வருகிறார். மெகா 2 ஜி ஊழல் வழக்கில் தண்டனை பெற்று திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்திருக்கும் கனிமொழி ஊழல் ஒழிப்பு குறித்துப் பேச தகுதியற்றவர். வாரிசு அரசியலுக்கு தமிழக வாக்காளர்கள் முடிவு கட்ட வேண்டும்," என்றார்.