அதிமுகவுடன் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை: தா. பாண்டியன் திட்டவட்டம்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தாம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்திகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறுத்துள்ளார்.
மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை முதலில் உருவாக்கின. பின்னர் சட்டசபை தேர்தலுக்காக இது மக்கள் நலக் கூட்டணியாக மாறியது.
ஆனால் மக்கள் நலக் கூட்டணியாக மாற்றியதை தொடக்கத்திலேயே எதிர்த்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். அதிமுகவின் ஆதரவாளராக அறியப்பட்டவர் தா.பா. ஆகையால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அவர் விரும்புவதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும் மக்கள் நலக் கூட்டணி உதயமாக தேர்தல் களத்தில் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றும் இதற்கான பேச்சுவார்த்தையை தா. பாண்டியன் ரகசியமாக நடத்துவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தா. பாண்டியன் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் கூறியதாவது:
லோக்சபா தேர்தலின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலிடத் தலைவர்கள் வெளிப்படையாக ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அதன் பின்னர் எங்களுடன் கூட்டணி வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கட்சியிடம் தெரிவித்தது அதிமுக. அது எங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஆக லோக்சபா தேர்தலின் போது எங்களுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுகதான். அந்த தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுடன் ஒட்டுப்போடும் வேலையை, பேச்சுவார்த்தையை நானோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள எவருமே செய்யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை.
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதற்கேற்ப மக்கள் நலக் கூட்டணி உருவானது. அப்படி மாற்றம் தேவை என எண்ணுகிற கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் இணையம். மக்கள் நலக் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு நாங்கள் உரிய மரியாதை தருவோம்.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.