கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த தா.பாண்டியன், முத்தரசன்
வயது முதிர்வினால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சென்னை: கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் சென்றனர். ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை சந்தித்து இருவரும் நலம் விசாரித்தனர்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் உள்ள கருணாநிதி திடீரென்று கடந்த வாரம் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டு சில மணி நேரங்களில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
#JUSTIN
— News7 Tamil (@news7tamil) August 28, 2017
கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் தா.பாண்டியன், ஜி,முத்தரசன் திடீர் சந்திப்பு!#Karunanidhi pic.twitter.com/4KfN3UL8hc
நீண்ட நாட்களுக்குப் பிறகு கருணாநிதியை ஊடகம் வழியாகவும், நேரிலும் பார்த்த தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஓய்வில் இருக்கும் அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் அவரை விசிக தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தா.பாண்டியன் மற்றும் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.