சசிகலாவுக்கு ஆறுதல் சொன்ன தா. பாண்டியன், டெக்கான் கிரானிக்கல் அதிபர் சாந்தி ரெட்டி!
ஜெயலலிதா மறைவுக்காக சசிகலாவிடம் தா. பாண்டியன் ஆறுதல் கூறினார். டெக்கான் கிரானிக்கல் சாந்திரெட்டியும் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாவை நேரில் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் ஆறுதல் கூறினார்.
சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தில் காலை முதல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள், ஜாதி சங்கத் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். சசிகலாவை கூட்டம் கூட்டமாக சந்தித்து அதிமுக தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதேபோல் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள், பத்திரிகை அதிபர்களும் சசிகலாவை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் இன்று சசிகலாவை துயரம் தோய்ந்த முகத்துடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வழக்கமாக தம்முடைய சிவப்பு துண்டை தோளிலேயே போட்டிருக்கும் தா. பாண்டியன் ஆறுதல் கூற வந்ததாலோ என்னவோ அதை கையில் வைத்துக் கொண்டு சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார். ஏற்கனவே பாலசுப்பிரமணிய ஆதித்தன், இந்து என் ராம் ஆகியோர் சந்தித்த நிலையில் இன்று டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டின் அதிபர் சாந்தி ரெட்டி, அதன் ஆசிரியர் பகவான்சிங் ஆகியோரும் சசிகலாவை நேரில் சந்தித்தனர்.
முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், புரட்சி பாரதம் பூஜை ஜெகன் மூர்த்தி ஆகியோரும் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.