கொள்ளுப் பேரன் காலம்வரை கருணாநிதிதான் ஆட்சியில் இருக்க வேண்டுமா? தா.பாண்டியன் கேள்வி
கோவை: தனது கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி விரும்புகிறார், எனவேதான், ஆறாவது முறையாக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கோவையில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார்.
தா.பாண்டியன் அளித்த பேட்டி: தேர்தல் நடைமுறை விதிகளை பயன்படுத்தி காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் வரலாற்றின் உழைக்கும் வர்க்கத்துக்கான மே தினத்தின் போது கொடிகள் கட்டக் கூடாது உட்பட பல்வேறு தடைகளை தேர்தல் ஆணையம் விதிப்பது சரியல்ல.
இதுவரை ரூ.60 கோடி வரை பணம் பறிமுதல் செய்ததாக தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது. ஆனால், இதன் பின்னணியில் இருககக்கூடிய அரசியல் கட்சி தொடர்பு, அதன் பின்னணி குறித்து பிடித்து இத்தனை நாட்கள் ஆகியும் விவரங்களை வெளியிடவில்லை.
பின்னணி யார்
பிடிபட்ட பணம் பின்னால் எந்த சக்தி இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். தேர்தல் நேர்மையாக நடக்கிறது என்று தேர்தல் ஆணையம் சொன்னால் மட்டும் போதாது. நம்பத்தகுந்த வகையில் இருக்க வேண்டும். எஞ்சிய நாட்களிலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணி நீக்கம்
தற்போது, தேர்தல் கால விதிமுறைகளின் பேரில் இருக்கக்கூடிய கட்டுப்பாடு விதிகளை பயன்படுத்திக் கொண்டு, தொழில் நிறுவன அதிபர்கள் வேலையாட்களை திடீரென பணி நீக்கம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆணையம் நடவடிக்கை
கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று, 35 தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் 17 தொழிலாளர்களுக்கு உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த 2 மாதத்தில் அநியாயங்கள் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உதவக்கூடாது.
மொரீசியஸ்
பாதுகாப்பு துறையில் நேரடி முதலீட்டை அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்துள்ளன. 2011ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை இந்தியாவில் நேரடி முதலீட்டில் மூன்றில் 2 பங்கு மொரீசியஸ் தீவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் இருந்து வந்துள்ளது.
கருப்பு பணம்
உலகம் முழுவதிலும் இருந்து முதலீடு வர வேண்டும். ஆனால், ஒரு கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட நாடு 100 கோடி கொண்ட நாட்டில் 2 பங்கு முதலீட்டை வைத்துள்ளது என்றால் இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மொரிசியஸ் தீவில் சின்ன பெயர் பலகையை வைத்து எளிதாக பதிவு செய்துவிட முடியும். பின்னர் கள்ளப் பணத்தை, வெள்ளைப் பணமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து மாற்றப்படுகிறது.
வாக்கு போடாதீர்கள்
இளைஞர்களால் தமிழகம் விடிய வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார். அதனால்தான் 6வது முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறாரா?, தனது கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு கேட்கிறார். எனவே, குடும்ப ஆட்சி வரக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு வாக்கு அளிக்கக் கூடாது. இவ்வாறு, தா.பாண்டியன் தெரிவித்தார்.