ஐடி ரெய்டு: சசிகலா குடும்பம் மீது தா.பா. காட்டும் பாசம் பயங்கரமா இருக்கே!!!
சசிகலா குடும்பம் மீதான வருமான வரி சோதனைக்கு மூத்த இடதுசாரி தலைவர் தா. பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: வருமான வரி அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள சசிகலா குடும்பம் மீது பாசத்தை அதிகமாகவே காட்டினார் மூத்த இடதுசாரித் தலைவர் தா.பாண்டியன்.
சசிகலா, ஜெயலலிதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை எப்போதும் தெரிவித்து வருபவர் தா. பாண்டியன். அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்காமல் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை கடுமையாகவே விமர்சித்தவர் தா.பா.
தற்போது சசிகலா குடும்பத்தின் 355 பேர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியுள்ளனர். போலி நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மாற்றினர் என்பது புகார்.
ஆபரேஷன் க்ளீன் ப்ளாக் மணி
ஏற்கனவே சசிகலாவை இயக்குநராக கொண்ட போலி நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. ஆபரேஷன் க்ளீன் ப்ளாக் மணி என்ற நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த ரெய்டு பார்க்கப்படுகிறது.
டிவியில் விவாதம்
ஆனால் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களோ அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் இந்த ரெய்டு குறித்து விவாதிக்கப்பட்டது.
தா.பாண்டியன் பொங்கல்
இதில் பங்கேற்ற மூத்த இடதுசாரித் தலைவர் தா. பாண்டியன், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக அதிகமாகவே பொங்கிவிட்டார். சசிகலா குடும்பத்தில் பிறந்த ஒரு காரணத்துக்காகவே திருடர்களாக முத்திரை குத்துகிறது ஒரு கூட்டம் என காட்டம் காட்டினார்.
பரபரப்பை ஏற்படுத்திய தா.பா
இந்த வருமான வரித்துறை சோதனையை நடத்திய மத்திய அரசு, தமிழகத்துக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கொந்தளித்தார். தா.பாண்டியனின் இந்த ஆவேசமான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.