ஊழல் சொத்து பறிமுதல் சாத்தியமில்லை- கம்யூனிஸ்டுகள் கிங்மேக்கரா இருக்க கூடாது: 'கலகக் குரல்' தா.பா.
திருச்சி: ஊழல் செய்தோரின் சொத்துகளை பறிமுதல் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று; கம்யூனிஸ்டுகள் கிங்காகவோ கிங் மேக்கராகவோ இருக்க கூடாது; இருக்கவும் முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கியது முதலே கடும் எதிர்ப்பை அவ்வப்போது பதிவு செய்து வருபவர் இ.கம்யூ. மூத்த தலைவர் தா. பாண்டியன். இந்த கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணியானபோதும் கலகக் குரலை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன், ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம் (வைகோ வாக்குறுதி) என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
வெற்றிகரமான கூட்டணிக்காக சில சமரசங்களை செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் என்போர் கிங்காகவோ கிங்மேக்கராகவோ இருக்க கூடாது என்பதுதான் என் கருத்து. எந்த ஒரு கருத்து கணிப்பையும் நான் நம்பவில்லை. மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்போம் என்றார்.
ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம் என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால் அது சாத்தியமே இல்லை என்று தா. பாண்டியன் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் கம்யூனிஸ்டுகளை கிங் மேக்கராக சித்தரித்து விஜயகாந்த் பேசியிருந்தார். அதற்கும் இப்போது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தா.பா.