அப்பல்லோவில் தா. பாண்டியன்.. "முதல்வரை சந்தித்தவர்களை சந்தித்துப் பேசினேன்"
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியவர்களை நாங்கள் சந்தித்து பேசினோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் சந்திக்கவில்லை எனவும் அவர் கூறினார். முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் என சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்த பின் பேட்டியளித்த தா.பாண்டியன் கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் அறிக்கை மட்டுமே மக்களுக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ என்று அதிமுகவினர் கவலையடைந்துள்ளனர்.
முதல்வர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் ஆளுநர் சென்று முதல்வரை நேரில் சந்தித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் கடந்த 1ம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அறிக்கை வெளியிட்டார்.
இதன் பின்னர் முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில் இன்று தா.பாண்டியன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு இருந்த முக்கிய அதிமுக நிர்வாகிகளிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த தா.பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் கவனித்து வரும் நம்பிக்கைக்கு உரியவர்களை நாங்கள் சந்தித்து பேசினோம். முதல்வர் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதித்து, அவருக்கு பிடித்த மருத்துவமனையில், சிகிச்சை பெறுவது அவர் விருப்பம். என்ன சிகிச்சை பெறுகிறார், எப்படி இருக்கிறார் என்பதை எவருக்கும் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெண் என்ற ரீதியில், அவரது படத்தை காண்பிக்கவோ, நேரில் பார்க்க அனுமதிக்கவோ அவசியம் இல்லை என்றும் தா.பாண்டியன் கூறினார்.