மோடியின் ஆட்சியால் சரிந்து போனதே இந்தியப் பொருளாதாரம்.... சீறும் தா.பாண்டியன்
மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக தா.பாண்டியன் விமர்சித்து உள்ளார்.
கோவை : மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீட்டுக்கட்டு போல் சரிந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்.
கோவையில் செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் இன்று கூறியதாவது:
இந்தியாவிற்காக மோடி அறிவித்த திட்டங்கள் என்ன ஆனது? வெறும் அறிவிப்புகள் தான் வருகிறது? அதனுடைய நிலை பற்றி எதுவும் தெரியவில்லை.
மேக் இன் இந்தியா திட்டம் எங்கே போனது ? எல்லாவற்றையும் இந்தியாவில் தயாரிக்க சொல்லிவிட்டு, சர்தார் வல்லபாய் படேலுக்கு வைக்கும் சிலையை மட்டும் ஏன் வெளிநாட்டில் தயாரிக்கிறது பா.ஜ.க?
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் 15 லட்சம் மக்கள் வேலை இழந்து இருக்கிறார்கள், நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமாக குறு மற்றும் சிறு தொழில்கள் மூடப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தவறான பொருளாதாரக்கொள்கைகள் மூலம் பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார். இதனால் இன்போசிஸ் உள்ளிட்ட முக்கியமான இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து இருக்கின்றன.
பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தியர்களை விடுத்து, அமெரிக்கர்களை வேலையில் அமர்த்த ஆரம்பித்துவிட்டனர்.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.