For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று தை அமாவாசை: ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மற்றும் குளக்கரைகளில் மக்கள் புன்னிய நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலிலும், கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்திலும், வேதாரண்யம், கோடிக்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

திதிகளிலே மிகவும் பிரசித்தி பெற்றது, மகத்துவம் நிறைந்தது அமாவாசை. இந்த நாளில் இறந்த முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இறந்தவர்களை நினைத்து வழிபடுவதால் அவர்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் என்றும், அவர்களின் பரிபூரண ஆசிர்வாதம் சந்ததியினருக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சூரியனின் தென்திசை பயண காலமான ஆடி மாதம் அமாவாசையன்று, முன்னோர்கள் பூமிக்கு வர ஆரம்பிக்கின்றனர்.

புரட்டாசி மாத அமாவாசையன்று மொத்தமாக கூடுகின்றனர். இதை, மகாளய அமாவாசை என்பர். முன்னோர்களை வழி அனுப்பும் நாள் முன்னோர்கள் தை அமாவாசையன்று, மீண்டும் பிதுர்லோகம் திரும்புகின்றனர் ஆக, ஆடி அமாவாசையன்று, முன்னோரை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இதனால் தான், 12 அமாவாசைகளும், முன்னோருக்கு திதி கொடுக்க முடியாத சூழ்நிலையில், இந்த மூன்று அமாவாசைகளுமாவது கொடுக்கட்டும் என முக்கியத்துவம் தந்துள்ளனர்.

திதி கொடுத்து வழிபாடு

திதி கொடுத்து வழிபாடு

இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம். பொதுவாக அமாவாசையன்று புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள்.

முன்னோர்களுக்குப் படையல்

முன்னோர்களுக்குப் படையல்

இஷ்ட தெய்வ ஆலயங்களில் வழிபாடு செய்து இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வார்கள். மறைந்த தாய், தந்தையர் படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள். சில முக்கிய ஊர்களில் திதி கொடுத்து வழிபடுவதை விசேஷமாக கருதுகிறார்கள்.

தை அமாவாசை

தை அமாவாசை

இந்த ஆண்டு தை அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் புனித நீராடினர்.

22தீர்த்தங்கள்

22தீர்த்தங்கள்

இதையடுத்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களுக்கு சென்று புனிதநீராடினர். இதற்கென கோயிலின் 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ராமநாதசுவாமி தீர்த்தவாரி

ராமநாதசுவாமி தீர்த்தவாரி


தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோவிலில் ஸ்படிக லிங்க பூஜையும், தொடர்ந்து காலபூஜையும் நடைபெற்றது. 7 மணிக்கு கோவிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் பஞ்சமூர்த்திகள் அக்னி தீர்த்தக்கடற்கரையில் எழுந்தளினர். பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து நீராடினர்.

குற்றாலத்தில் குவிந்த கூட்டம்

குற்றாலத்தில் குவிந்த கூட்டம்

தை அமாவாசையை முன்னிட்டு இன்று குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் அதிகாலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மெயினருவியில் புனித நீராடிய மக்கள் அருவிக்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் சென்று மந்திரங்கள் ஓதி எள்ளும், தண்ணீரும் இறைத்து மோதிரவிரலில் தர்ப்பை புல் அணிந்து தன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தமிழகம் முழுவதும் புனித நீராடல்

தமிழகம் முழுவதும் புனித நீராடல்

தமிழகத்தில் திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நீர் நிலைகளில் புனித நீராடிய மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். முக்கியமானவை.

லட்சதீபம்

லட்சதீபம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் ஒளிச்சுடர்களாகவே காணப்படும்.

கங்கையில் புனித நீராடல்

கங்கையில் புனித நீராடல்

வடநாட்டில் காசி, கயா, பத்ரிநாத், அலகாபாத் திரிவேணி சங்கமம் மற்றும் கேரளாவில் ஐவர் மடம் பிரசித்தி பெற்றது. அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குவது சிறப்பு. மஹோதய அமாவாசை தினமாக கடைபிடிக்கப்படும். இன்று ஏராளமானோர் கங்கையில் புனித நீராடினர்.

கோதுமை உணவுகள்

கோதுமை உணவுகள்

பிதுர்க்காரகனாகிய சூரியன் நாம் செய்யும் தான தருமங்களுக்கான பலன்களை பிதுர் தேவதைகளிடம் வழங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். பிதுர் வழிபாட்டில் காகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, பசு மாட்டுக்கும், காகத்துக்கும் முதலில் உணவளிப்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

English summary
Thousands of Hindus from various parts of the country took a holy dip in 'Agni Theertham' (sea) and performed oblations to the departed ancestors in Rameswaram Island, Triveni Sangamam in Kanyakumari and various holy ghats across the state on the occasion of 'Thai Amavasya', today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X