தை அமாவாசை: ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்
தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் கொண்டு நடத்தப்பட்ட கண் திருஷ்டி போக்கும் திருஷ்டி துர்கா ஹோமத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வேலூர்: தை அமாவாசையை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று கண் திருஷ்டி தீர மிளகாய் போட்டு யாகம் நடத்தினர்.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி யக்ஞ ஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னதிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த சன்னதி முன்பு 13 ஆண்டுகளாக அணயா ஹோமகுண்டமாக 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் 16.01.2018 செவ்வாய்க் கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு 'திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.
தை அமாவாசை ஹோமம்
இந்த யாகத்தில் பூசணிக்காய்கள் தவிர கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம், மிளகாய் வற்றல் பொட்டலம், மஞ்சள், குங்குமம், பழங்கள், மூலிகைகள், சிகப்பு வஸ்திரம், வேப்ப எண்ணெய், நெய், புஷ்பங்கள், பட்சணங்கள், வாசனாதி திரவியங்கள், மேலும் பல விசேஷ திரவியங்கள், குங்கிலியம், சௌபாக்கியப் பொருட்கள் அக்னியில் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
தீய சக்திகள் விலகும்
இந்த யாகம் மூலம் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை ஜாதக ரீதியிலான தோஷங்கள், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள், மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்பட்டது.
பாதிப்புகள் அதிகம்
திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களாலும் பொறாமைத்தன்மையாலும் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும் பாதிப்பே ஆகும். ‘த்ருஷ்' என்றால் பார்த்தல் என்று பொருள். ஒருவரது அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டு அவரைச் சுற்றி இருப்பவர்கள் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது சம்பந்தப்பட்டவரைப் பாதிக்கும். இதனால், தீய விளைவுகளே ஏற்படும்.
திருஷ்டியினால் பாதிப்பு
திருஷ்டியை விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபித்துள்ளார்கள். ஒருவரிடம் இருந்து புறப்பட்டு வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் - இயல்பு முறையில் - அன்றாட நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதுவே திருஷ்டி எனப்படும்.
கவனம் சிதறும்
கெட்ட எண்ணத்தோடு பார்ப்பவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும் கவனமும் வேறு எதிலாவது படும்படி ஒரு பொருளை வீட்டிலோ, அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ வைத்து விட்டால், பார்ப்பவர்களின் கவனம் முழுக்க அங்கே செல்லும். இதனால் திருஷ்டியின் பாதிப்பு ஓரளவு குறைய வாய்ப்பு உண்டு.
ஹோமத்தில் பங்கேற்பு
இப்படிப் பலருக்கும் இருந்து வரும் திருஷ்டிகளைப் போக்கும் விதமாக வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடத்தப்பட்ட திருஷ்டி துர்கா ஹோமத்தில் ஏராளமானோர் பங்கேற்று யாக குண்டத்தில் மிளகாய் வற்றலை சமர்பித்தனர்.