வாழ்வில் பொங்கட்டும் மகிழ்ச்சி.... பொங்கலோ... பொங்கல்!
உலகிற்கு வெப்பத்தை அளிக்கும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சென்னை: மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதற்காகவும், உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம்.
உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளுக்காக 10 நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடித்து தயாராவது தமிழர் மரபு. வீடுகளை அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி, சிறுபீழைப்பூக்கள், கம்பு, ஆவாரம்பூ, வேப்பிலை வைத்து காப்பு கட்டி பொங்கலை வரவேற்பார்கள்.
மண்பானையை அலங்கரித்து கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புத்தரிசி போட்டு பொங்கல் சமைப்பார்கள். பொங்கி வரும் போது குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி வணங்குவார்கள்.
இனிப்பு தரும் கரும்பு வைத்து தலைவாழை இலை போட்டு சூரியனுக்கு படைத்து மகிழ்ச்சியுடன் நன்றி கூறும் நன்னாலே பொங்கல் திருநாள்.
இரண்டாம் நாள் கால்நடைகளுக்காக மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாள் உறவுகளுடன் கூடி மகிழ காணுப்பொங்கல் என தித்திக்கும் பொங்கல் கொண்டாடி திகட்ட திகட்ட அனுபவிப்பதே தமிழர் பண்பாடு.
பொங்கல் பற்றிய மேலும் பல செய்திகளை இங்கு படித்து ருசிக்கலாம் ( பொங்கல் )