தைப்பூசம் கோலகலம்: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவிந்த பக்தர்கள்
கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், ஜோதி தரிசனம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 5 மணிக்கு அகவல் பாராயணம் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் வள்ளலார் சந்நிதி, கருங்குழி சந்நிதியிலும், 10 மணிக்கு ஞானசபையிலும் கொடி ஏற்றப்பட்டது.
வள்ளலார் நிறுவிய சபை
தைப்பூச விழாவில் வடலூர்,சிறப்பிடம் பெறுகிறது. சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பிய அருளாளர் ராமலிங்க அடிகளார் 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார்.
ஏழு திரைகள் தத்துவம்
ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி!அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து.
ஜோதி வடிவில் இறைவன்
தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் வள்ளலார். இதனை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
ஜோதி தரிசனம்
இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் தொடங்கியது. ஏழு திரைகள் நீக்கப்பட்டு ஜோதி வடிவில் இறைவன் தரிசனம் கொடுத்தார். அப்போது அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' என்ற மகா மந்திரத்தை முழங்கி இறை வடிவான ஜோதியை தரிசனம் செய்தனர்.
6 காலங்களில்
இதனைத் தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 4-ஆம்தேதி காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜோதி தரிசனத்தை ஒட்டி, 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். 15க்கும் மேற்பட்ட இடங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திரு அறை தரிசனம்
5ஆம் தேதி காலை 10:00 மணிக்கு, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் எடுத்துச் செல்லப்படும். வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைத்து திரு அறை தரிசனம், பிற்பகல் 12:00 துவங்கி, மாலை 6:00 மணி வரை நடக்கிறது.