இன்று தைப்பூசம்: தமிழக முருகன் கோவில்களில் கோலாகலம்.. காவடி, பால்குடம் தூக்கிக் கொண்டாட்டம்
சென்னை: தமிழகத்தில் இன்று தைப்பூசம் வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாடப்படுபடுகிறது. பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இன்று தைப்பூசம். இதையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது. பால் குடம், காவடி, பாதயாத்திரை என பக்தர்கள் முருகன் கோவில்களுக்குப் படையெடுத்துள்ளனர்.
பூச நட்சத்திரமும், பெளர்னமி திதியும் இணையும் நாள்தான் தைப் பூசமாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் அறுபடை வீடுகளிலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். பழனியில்தான் தைப்பூசம் மிக மிக விமரிசையாக கொண்டாடப்படும்.
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கைதப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பழனியில் இன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.
இங்கு கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 6-வது நாளான நேற்று முத்துக்குமாரர்- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கூடி இருந்த திரளான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!! என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், வேத மந்திரங்கள் முழங்க திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு மேஷ லக்னத்தில் திருத்தேரேற்றமும் நடைபெற்றது..
மாலை 4.25 மணிக்கு தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பல லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளதைக் கருத்தில் கொண்டு மாவட்ட எஸ்.பி. சரவணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மட்டுமின்றி தேனி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களோடு, திருடர்களும் வலம் வருவார்கள் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க குற்றப்பிரிவு போலீசாரை கொண்ட 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாதாரண உடை அணிந்து, பக்தர்களை போலவே போலீசாரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்களை கொண்ட 10 குழுவினர், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய இடங்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காணிப்பு பணியில் ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. சுமார் 2 அடி நீளம், அகலம் கொண்ட இந்த விமானத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் உள்ள வட பழனியாண்டவர் கோவிலிலும் தைப்பூசத் திருவிழா வழக்கம் போல தடபுடலாக கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். பால் குடம் எடுப்பது, காவடி எடுப்பது ஆகியவையும் வழக்கம் போல நடந்து வருகிறது.
மேலும் கந்தக்கோட்டம், குன்றத்தூர் முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள குமரன் குன்றம் கோவில், சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் இன்று தைப்பூச விழா நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில், குமரக்கோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட பல கோவில்களிலும் தைப்பூசம் களை கட்டியுள்ளது.