ஜனவரி 17ல் வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா
வடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில், சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஜனவரி 17ம் தேதி நடைபெற உள்ளது.
கடவுளை அகத்தில் ஒளி வடிவிற்கண்ட பெருமானார் வள்ளலார், அதை புறத்தில் எடுத்துக் காட்டவும் எல்லோரும் ஞான அனுபவம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வடையவும், உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலூரில் இறைவனின் உண்மையை எடுத்துக் காட்ட சத்திய ஞான சபை ஒன்றினை 25 - 01 - 1872 அன்று நிறுவினார்.
இந்த சத்ய ஞான சபையையில், எல்லா சமயத்தவரும், மதத்தவரும் வந்து வணங்க கூடிய ஒரு பொதுவான ஆலயமாக விளங்குகின்றது.
இந்த சத்ய ஞான சபை எண்கோண வடிவில் தெற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. சத்ய ஞான சபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும், மையத்தில் ஞானசபையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மையத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஜோதி வடிவில் விளங்குகிறார்.
இந்த சத்திய ஞான சபையில், 143 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, ஜனவரி 17 ம் தேதி நடைபெறுகின்றது.
இன்று முதல், 15 ம் தேதி வரை, திருஅருட்பா முற்றோதல் நடைபெறுகின்றது. ஜனவரி 16 ம் தேதி காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், காலை 7. 30 மணிக்கு தரும சாலை, வள்ளலார் அவதரித்த மருதூர், கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெறுகிறது
ஜனவரி 17 ம் தேதி காலை 6 மணிக்கும், 10 மணிக்கும் , மதியம் 1 மணிக்கும், இரவு 7 மணிக்கும், இரவு 10 மணிக்கும் மறு நாள் ஜனவரி 18 ம் தேதி காலை 5.30 மணிக்கு என மொத்தம் ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெறும்.
ஜனவரி 19 ம் தேதி, வள்ளலார் சித்தி பெற்ற சித்திவளாகத்தில், மதியம், 12 மணி முதல் மாலை 6 மணி வரை திருஅறை தரிசனம் நடைபெறுகின்றது.
இந்த விழாவில் பல ஆயிரக்கணக்கான பகர்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.