பழனியில் தைப்பூச திருவிழா கோலாகல கொண்டாட்டம்: 60 ஆண்டுகளில் முதல்முறையாக காலையில் தேரோட்டம்
பழனியில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 60 ஆண்டுகளில் முதல்முறையாக காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
Recommended Video
பழனி: பழனியில் தைப்பூச திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து கொண்டு பழனி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
தைப்பூசம் திருநாளன்று முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் காவடி எடுத்து செல்வது வழக்கம்.அதன்படி அறுபடை வீடுகளிலும் தமிழகம் முழுவதிலுமுள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பழனியில் கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிலிருந்து 7-ஆம் நாளான இன்று தைப்பூசம் என்பதால் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இன்று அதிகரிக்கும்
தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மட்டும் 6 லட்சம் பேர் முருகனை தரிசனம் செய்துள்ளனர். அந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிக்கக் கூடும்.
நடை சாத்தப்படும்
அதிகாலை 4 மணிக்கே தண்டாயுதபானி சுவாமியின் மூலவர் சன்னதியின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விஷ்வரூபம், விழா பூஜை, சிறுகால சந்தி என்ற 3 பூஜைகளும் முடிவடைந்திருக்கின்ற நிலையில் உச்சிக்கால பூஜையானது 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. வழக்கமாக சாயரச்சை பூஜையானது மாலை 5 மணிக்கு நடைபெறும். ஆனால் இன்று சந்திரகிரகணம் என்பதால் அந்த பூஜையும் இன்று மதியத்திற்கே நடத்தப்படுகிறது.
12 மணிக்கு நிறுத்தம்
இதனால் மலைமேல் வரக்கூடிய பக்தர்கள் 12 மணியுடன் நிறுத்தப்படுவார்கள். அதே போன்று கோவிலில் சாயரச்சை பூஜை முடிவடைந்ததற்கு பிறகு 2.45 மணிக்கு நடை அடைக்கப்படும். அதற்கு பிறகு சந்திரகிரகணம் முடிவடைந்ததற்கு பிறகு தான் 8.30 மணிக்கு தான் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஆனால் அப்பொழுது கூட பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
60 ஆண்டுகளில் முதல்முறை
தைப்பூசத்தின் முக்கிய விழாவான திருத்தேரோட்டமானது கோயிலின் அடிவாரத்தில் நடைபெற இருக்கிறது. வழக்கமாக தேரோட்டமானது தைப்பூச தினத்தில் மாலையில் நடைபெறும், ஆனால் இன்று சந்திரகிரகணம் என்பதால் காலை 10.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் காவடிகள் எடுத்தும், நடைபாதையாகவும் பக்தர்கள் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்திராத வண்ணம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.