பழனியில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்... காவடியுடன் குவிந்த பக்தர்கள் அரோகரா முழக்கம்
பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தடை உத்தரவு இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் காவடியுடன் குவிந்துள்ளனர்.
பழனி: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் ஆலயத்தில் தேரோட்டம் எளிமையாக நடைபெற்றது. காவடி சுமந்து வந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் முதன்மையானதாகும். இன்றைய தினம் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியில் குவிந்துள்ளனர்.
கொரோனா தடை உத்தரவையும் மீறி ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் கிரிவலம் வந்து அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய அம்சமான திருக்கல்யாணம் நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
தைப்பூச திருவிழா தமிழகம் முழுவதும் கோலாகலம் - பழனி, திருச்செந்தூரில் தடையை மீறி குவிந்த பக்தர்கள்
வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், பழங்கள் விபூதி, உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு வஸ்திரம், நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
முத்துக்குமாரசாமி
கொரோனா பரவல் காரணமாக கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டுமே பங்கேற்ற திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையடுத்து வெள்ளி மயில் வாகனத்தில் தம்பதி சமேதராக முத்துக்குமார சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவடி சுமந்த பக்தர்கள்
காரைக்குடியில் இருந்து வந்த நகரத்தார் குழுவினர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இவர்கள் கிரி வீதிகளில் காவடியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும் அடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் ஏராளமான பக்தர்கள் தங்கியுள்ளனர்.
விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்
காலை நேரத்தில் சூரிய உதயத்தின் போது சூடம் ஏற்றி வழிபட்டனர். பாதவிநாயகர் கோவிலில் வழிபட்டு அங்கிருந்தவாறே பழனி முருகனை தரிசனம் செய்து மனமுருக வேண்டிக் கொண்டனர். கிரி வீதிகளிலும் சுற்றி வந்து வழிபட்டனர். தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட போதிலும் பழனியில் குவிந்துள்ள பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க அடிவாரத்தில் இருந்தபடியே சூடம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் வழிபட்டுச் சென்றனர்.
தைப்பூச தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதற்காக சிறிய அளவிலான தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. தைப்பூச தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.