தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம் நியமனம்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றினார் அவரது தோழி சசிகலா. இதையடுத்து கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சிறைக்கு செல்லும் முன்பாகவே கட்சி அதிகாரம் தனது குடும்பத்திடம் தான் இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட சசிகலா, ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தனது அக்காள் மகன் டிடிவி.தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்து கட்சிப் பொறுப்பையும் ஆட்சி பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு சிறைக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து அரசின் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக கவனிக்க டிடிவி தினகரனை டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக்க சசிகலா குடும்பம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுபணித் துறை அமைச்சராக இருந்தார்.