குழந்தைப் பருவத்தையாவது விட்டு வையுங்களேன்.. தாமரை விளாசல்
சென்னை: கடும் கோடை வெயிலுக்கு மத்தியில் இன்னும் விடுமுறை விடாமல் பள்ளிகளை நடத்தும் அரசின் போக்கை கவிஞர் தாமரை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
17.4.17. வெயில் வாட்டியெடுக்கும் என்று தொலைக் காட்சியில் செய்தி போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். வெளியே போவதை முடிந்தவரை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இன்னும் மூன்று நாளைக்கு இப்படித்தான் கொளுத்துமாம்.
ஆனால் குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை இதுவரை விடப்படவில்லை. அரசு அதிகாரபூர்வமாகவே ஏப்.21 வரை பள்ளி வேலை செய்யும் என்று அறிவித்திருக்கிறது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவா வேண்டாவா ?????
தனியார் பள்ளிகள் இன்னும் கொடுமை!. மாதக்கடைசி வரை பள்ளி நாளாக வைத்திருக்கின்றன. 10,12 போகும் குழந்தைகள் நிலை பரிதாபத்திலும் பரிதாபம்! மே மூன்றாவது வாரமே பள்ளி தொடங்கி விடுகிறது. யாருக்காக வேண்டி இந்தச் சீரழிவு ???. கோடை விடுமுறையில் படித்துத்தான் கோட்டை கட்ட வேண்டுமா ?.
தண்ணீர்ப் பிரச்சினை வேறு தலைவிரித்தாடுகிறது.
எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்டீர்கள். குழந்தைகளின் குழந்தைப் பருவத்தையாவது விட்டு வையுங்களேன். இந்த விளையாட்டுப் பருவத்தை விட்டுவிட்டால் இனி வாழ்நாளில் என்றேனும் திருப்பி அடைய முடியுமா?. பெரியவர்கள் மனசைத் தொட்டுச் சொல்லுங்கள், சிறுவயதில் நாமெல்லாம் கோடை விடுமுறையைக் கொண்டாடிக் களிக்கவில்லையா?.
*குழந்தைகளுக்கு முழுமையான இரண்டு மாதங்கள் விடுமுறை அளிக்க அரசை வேண்டிக் கொள்கிறேன்*.
பொதுமக்கள் இந்தக் கருத்தை சமூக வலைதளங்களில் பெரிதுபடுத்த வேண்டுகிறேன். எல்லோரும் சேர்ந்து குரல் எழுப்பினால்தான் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.
பி.கு: இதை வலியுறுத்தி அரசிடம் நான் சென்ற வாரம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறேன். கல்வி அமைச்சரை சந்திக்க இருக்கிறேன்.