பதவி ஏற்பில் சிக்கல்.. போயஸ் கார்டனில் தம்பிதுரை.. சசிகலாவுடன் அவசர ஆலோசனை
சசிகலா பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை போயஸ்கார்டன் சென்று சசிகலாவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று முதல்வராக பதவி ஏற்க இருந்தார். ஆளுநர் தமிழகத்தில் இல்லாததால் பதவி ஏற்பு நிகழ்ச்சி தள்ளிப் போயுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அவரது தோழி சசிகலா பொதுச் செயலாளராக அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார் விசாரணையில் உள்ள நிலையில், அவசர அவசரமாக சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் இன்று தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ஆளுநர் மும்பையில் இருப்பதால் பதவி ஏற்பில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வர உள்ள நிலையில், முதல்வராக பதவி ஏற்பது சரியல்ல என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.
இப்படி ஒரு இக்கட்டான சூழலில், சசிகலா பதவி ஏற்பதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஆளுநர் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், லோக் சபா துணை சபா நாயகர் தம்பி துரை இன்று சென்னை போயஸ் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சசிகலாவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் பதவி ஏற்பு தள்ளிப் போவது, சட்ட சிக்கல், மத்திய அரசின் நிலைப்பாடு உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலோசனையில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.