தம்பித்துரைக்கு ஒன்னும் தெரியாது... போட்டுத்தாக்கும் ஓபிஎஸ்!
எம்.பி தம்பித்துரைக்கு எதுவும் தெரியாது எப்படியோ காலத்தை ஓட்டுகிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக எம்.பி தம்பிதுரைக்கு பிரதமர் அலுவலக நடைமுறை கூட தெரியாது என முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். எதுவும் தெரியாமலேயே காலத்தை ஓட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டுதான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தர்மயுத்தத்தை தொடருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆதரவாளர்களை இன்று தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்த ஓ.பி.எஸ் பின்னர் அவர்களிடையே பேசினார். அப்போது அவர், ஜெயலலிதா நூறு ஆண்டு காலம் இருந்து நம்மை வழி நடத்துவார் என்று நினைத்தோம். ஆனால் இப்படி எங்களை தவிக்க விட்டு விட்டு சென்று விட்டார் என்றார்.
அருகதையில்லை
நான் உயிரோடு இருக்கும் வரை சசிகலா குடும்பத்தினர் யாரையும் கட்சிக்குள் சேர்க்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதா விரட்டியடித்த அனைவரும் கட்சிக்குள் வந்து விட்டனர். ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று விட்டது. அதை எதிர்த்துதான் நாங்கள் போராடி வருகிறோம் என்றார்.
ஓபிஎஸ் விமர்சனம்
அதிமுக எம்.பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நான் டெல்லி சென்ற பின்னர் தான்,தம்பிதுரை அதிமுக எம்.பிகளை கூட்டிக் கொண்டு பிரதமரை சந்திக்க வருவதாகவே எனக்கு தெரியும்.
தம்பித்துரைக்கு அனுமதியில்லை
டெல்லி வந்த அவருக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.எனவே நான் சந்திக்கும் போது தம்பிதுரை உடன் வரலாமா? என பிரதமர் அலுவலகத்தில் கேட்டேன்.ஆனால் அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. அதிமுக எம்.பிகள் கையெழுத்திட்ட அந்த கோரிக்கை மனுவையாவது என்னிடம் கொடுங்கள்.உங்கள் சார்பில் பிரதமரிடம் நான் கொடுக்கிறேன் என கூறினேன். ஆனால் அதற்கு தம்பிதுரை மறுப்பு தெரிவித்துவிட்டார்.
காலத்தை ஓட்டுகிறார்
கடைசி வரை பிரதமரை அவர் சந்திக்கவே முடியவில்லை.எப்படி ஒரு பிரதமரை சந்திப்பது என்ற நடைமுறை கூட தெரியாத ஒரு எம்.பியாகத்தான் தம்பிதுரை இவ்வளவு நாள் தனது காலத்தை ஓட்டியுள்ளார் என்றார்.
தர்மயுத்தம்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம். எங்களின் தர்மயுத்தத்தின் முதல்படி இதுதான். இதற்கும் நீதிகிடைக்காவிட்டால் எங்களின் போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும் என்று கூறினார்.