நாங்கள் சகோதரர்கள்.. 2 அணி அல்ல ஒரே அணிதான்.. தம்பிதுரை சொல்றதை பாருங்க!
சென்னை: நாங்கள் சகோதரர்களாகத் தான் உள்ளோம். அதிமுக இரு அணி அல்ல ஒரே அணிதான் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தம்பிதுரை எம்பி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, பாஜக கேட்டுக் கொண்டதன் பேரில் ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம்.
காங்கிரஸ் சார்பில் எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. அதிமுக மாபெரும் இயக்கம், அதனால் தான் ஒன்றுபட்டு செயல்படுகிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும்.
இரு தரப்பும் பேசி தீர்த்துக்கொள்வோம்.
நாங்கள் சகோதரரர்கள், நாங்கள் அ.தி.மு.க என்ற இயக்கத்தில் இரு அணியாக பிரியவில்லை. ஒரு அணி தான். டெல்லியில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினேன்.
அ.தி.மு.க. ஆட்சியை பாஜக அரசின் பினாமி ஆட்சி என தி.மு.க. சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றார்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், அதிமுக அணிகளை இணைக்கும் பேச்சுவார்த்தைக்காக டெல்லி வரவில்லை, பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். பாஜக இரு அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததாக வரும் செய்திகளில் உண்மையில்லை எனக் கூறினார். இந்த நிலையில் தம்பிதுரை அதிமுக ஒரே அணிதான் எனக் தெரிவித்துள்ளார்.