ஆர்.கே.நகரில் பணம் கொடுத்தது "அதிமுகவினர்"தான்.. ஆனால் அது நாங்கள் அல்ல... தம்பிதுரை மழுப்பல் பேச்சு
ஆர்கே நகரில் அதிமுகவினர் பணம் கொடுக்கவில்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக கரை வேட்டியை கட்டிக் கொண்டு மர்மநபர்கள் பணம் விநியோகம் செய்வதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகரில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் இங்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
பணப்பட்டுவாடா செய்ய ரூ.100 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றுள் 80 சதவீதம் பணம் விநியோகம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவுடன் அரசியல் கட்சியினர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக ஆளும் கட்சியினர் மீதும் தினகரன் அணியினர் மீதும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.
பத்ராவுடனான ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ஆர்கே நகரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யவில்லை. அதிமுகவினரின் கரைவேட்டியை கட்டிக் கொண்டு மர்ம நபர்கள் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தம்பிதுரை குற்றம்சாட்டினார்.