எஸ்.வி.சேகர் அவ்வளவு பெரிய அரசியல்வாதியல்ல...! - கரூரில் தகித்த தம்பிதுரை
எஸ்.வி.சேகர் அவ்வளவு பெரிய அரசியல்வாதியல்ல என்று கரூரில் தம்பிதுரை தெரிவித்தார்.
கரூர்: உச்ச நீதிமன்றத்திலேயே ஜாமீன் மறுக்கப்பட்டபோதும், காவல்துறையில் சரண்டர் ஆகாமல் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர். ' அவர் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. அவ்வளவுதான். மற்றபடி பெரிய அரசியல்வாதி எல்லாம் கிடையாது' எனப் பேசியிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.
கரூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்காக இன்று வந்திருந்தார் அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை. காந்தி கிராமம் பகுதியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.
இதன்பிறகு மீடியாக்களிடம் பேசியவர், ' காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த மத்திய அரசுக்கு எங்களுடைய நன்றி. ஆணையமோ, வாரியமோ...நமக்கு தண்ணி வந்தா போதும்' என்றவரிடம், தூத்துக்குடியில் ரஜினிக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கேட்டதற்கு, 'அவர் என்ன கொள்கையோடு இருக்கிறார் என்பதை முடிவு செய்துவிட்டு அரசியலுக்கு வரட்டும்.
அப்போது அவரைப் பற்றிப் பேசுகிறேன்' என்றவரிடம், எஸ்.வி.சேகர் பற்றிக் கேட்டுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்தவர், ' எங்க கட்சியில அவர் ஒரு முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர். அவர் ஒன்னும் மிகப் பெரிய அரசியல்வாதி எல்லாம் கிடையாது. அவர் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்' என்றார்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் பற்றிக் கேட்டபோது, ' தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிசாமி போவாரா...இல்லையா என்பதைப் பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். மேலும், அறிவாலயத்தில் ஸ்டாலின் நடத்துவது குழந்தைகள் ஆடும் விளையாட்டு போன்றது' என்றார் சிரித்துக் கொண்டே.