பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க முதல்வர் எடப்பாடியாரிடம் தமிமுன் அன்சாரி நேரில் வலியுறுத்தல்
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடன் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
நாகை: பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று நாகப்பட்டினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வருகை தந்தார். எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில், பயணியர் மாளிகையில் முதல்வர் எடப்பாடியாரை தமிமுன் அன்சாரி சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது பேரளிவாளனுக்கு பரோலை மேலும் 1 மாதம் நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை சாதி, மத, அரசியல், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற மனுவையும் கொடுத்து அது குறித்து விவாதித்தார்.
பேரளிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து, சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்பதாகவும், சிறைவாசிகள் விடுதலை குறித்து வேகமாக பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், இதில் உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்படி பாரபட்சமின்றி நடப்போம் என்றும் முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.
பிறகு நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் முதல்வர் எடப்பாடியாரிடம் தமிமுன் அன்சாரி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் எனது தொகுதிக்கு வருகை தந்திருக்கிறார். அவரை வரவேற்பதும், மரியாதை செய்வதும் ஒரு அரசியல் நாகரீகம்.
அந்த அடிப்படையில் அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து தொகுதி கோரிக்கைகளையும், இதர மக்கள் கோரிக்கைகளையும் அவரிடம் வலியுறுத்தினேன் என்றார்.