48 ஆண்டுகால தாமிரபரணி பாலம் கனவு திட்டம் பாதியில் நிற்கிறது! வருவாய்த்துறை மனம் இறங்குமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மக்களின் 48 ஆண்டு கால கனவு திட்டமான கருங்குளம் & கொங்கராயகுறிச்சி ஆற்றுபாலத்திட்டம் 75 சதவீதம் பணி முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது கொங்கராயகுறிச்சி. இதை சுற்றி சுமார் 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவர்கள் முக்கியமான வேலைக்கும், மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல தாமிரபரணி ஆற்றைக் கடந்து கருங்குளம் கரைக்கு தான் வர வேண்டும். ஆகவே இந்த இடத்தில் பாலம் கட்ட வேண்டும் என்று சுமார் 48 ஆண்டு காலமாக மக்கள் போராடி வந்தனர்.
இந்த பாலம் அமைக்க நபார்டு வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16 கோடியே 50 லட்சம் செலவில் பாலம் கட்ட கடந்த ஜுலை மாதம் 12 ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 19 கண்கள் கொண்ட உயர்மட்ட பாலம் 12 மீட்டர் அகலத்தில் கட்டும் பணி மிக வேகமாக துவங்கியது. கொங்கராயகுறிச்சியில் இருந்து சுமார் 75 சதவீத வேலை முடிந்து விட்டது. ஆனால் மீதி வேலையை முடிக்காமல் ஒப்பந்தகாரர்கள் பணியை கடந்த வாரம் நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.
கருங்குளம் பகுதியில் பாலம் கட்டும் இடத்தினை வருவாய் துறையினர் கையகபடுத்தி தரவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். எனவே வருவாய் துறையினர் இதில் தலையிட்டு இடத்தினை கையகப்படுத்தி உடனடியாக நிறுத்தப்பட்ட வேலையை துவங்கி வரும் மழை காலத்துக்குள் வேலையை முடித்து தரவேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
ஏப்ரல் மே மாதத்தில் தான் ஆற்றில் தண்ணீர் குறைவாக வரும். இந்த சமயத்தில் ஆற்றில் தண்ணீர் வரும் பகுதியில் வேலை நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தனர். தற்போது ஆற்று தண்ணீர் செல்லும் இடத்தில் தான் வேலை நடக்க வேண்டியது உள்ளது. எனவே உடனே வேலையை ஆரபிக்க வருவாய் துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.