தாமிரபரணி தூய்மை பணி இரண்டாவது கட்டமாக துவக்கம்
நெல்லை : பாபநாசத்தில் இருந்து சீவலப்பேரி வரை தொடங்கியுள்ள தாமிரபரணி தூய்மை திட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாய பணிகளுக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருப்பது தாமிரபரணி ஆகும்.
மேற்கு தொடர்ச்சி மலை பொதிகையில் துவங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைகாயல் பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த நீர் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலந்து வருவதால் மாசுபட்டு வருகிறது.
தாமிரபரணியை தூய்மைப்படுத்த பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே நெல்லை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சந்தீப் தந்தூரி தாமிரபரணியை சுத்தப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முதல் கட்டமாக மாநகர பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு இடங்களில் சுத்தம்படுத்தும் பணி நடந்தது.
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டமாக தாமிரபரணி பாயும் பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை மெகா தூய்மை பணி துவங்கியது.
இதில் 25 பொக்கலைன் இயந்திரம் உதவியுடன் தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.