கட்டுக்கடங்காமல் தெறித்து ஓடும் தாமிரபரணி ஆறு.. உச்சநீர்மட்டத்தை நெருங்கும் பெருஞ்சாணி அணை!
தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Recommended Video
கன்னியாகுமரி : கட்டுக்கடங்காமல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு தெறித்து ஓடுவதால், அந்த பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பாதுகாப்பான இடங்களுக்கும் செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இது முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டது ஆகும். இம்மாவட்டத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஜீவாதாரமாக இன்றுவரை இந்த அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருஞ்சாணி அணையும் வேக வேகமாக நிரம்பி தொடங்கியது. இந்த அணையின் மொத்த கொள்ளவே 77 அடி ஆகும். ஆனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நீர்மட்டம் 75 அடியை தாண்டி நிரம்பி வருகிறது.
இதனால் முழு கொள்ளளவை மிக விரைவில் எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அணையிலிருந்து 200 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்துவிட்டதால் பரளி ஆறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடுகிறது. பொதுவாக இந்த அணையின் நீர்மட்டம் 71 அடியை தொட்டதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.
அதன்படி 75 அடியை எட்டிவிட்டதால், பரளி ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த ஆறுகள், திருவட்டார், சிதறால், திக்குறிச்சி, குழித்துறை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்துதான் செல்ல வேண்டியுள்ளது. எனவே பெருஞ்சாணி அணையின் தண்ணீர் ஓடும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.