பெண்களின் தாலி அகற்றிய தி.க: கி.வீரமணி படத்தை எரித்து… சட்டையை கிழித்து போராட்டம்
சென்னை: திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் விழாவை கண்டித்து தமிழ் அமைப்புகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தின. கி.வீரமணியின் உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களின் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
திராவிடக் கழகத்திடம் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் தமிழ்ப் பெண்களின் தாலிகளை அகற்றியே தீருவோம் என்று வீரமணி தலைமையில் புத்தாண்டு தினமான நேற்று பல தமிழ்ப் பெண்களின் தாலி அகற்றப்பட்டது.
தொடர்ச்சியாக திராவிட அமைப்பினர் தமிழினத்திற்கு எதிராகவும் தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள். அதன் உச்ச கட்டமாக தமிழர்களுக்கு எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழ்ப் பெண்கள் தாலி அணியக் கூடாது என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர் திராவிட அமைப்பினர்.
போராட்டம்
தமிழ் மண்ணில் இருந்து திராவிடக் கருத்தியலை வீழ்த்துவோம் என்ற செய்தியே போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோராலும் முன்வைக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பல தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செருப்பால் அடித்து
பெண்களை இழிவு செய்த திராவிட கழகத்தை கண்டிக்கும் வகையில் பெண்களே வீரமணியின் படத்தை செருப்பால் அடித்தனர்.
கறுப்பு சட்டை கிழிப்பு
மேலும் திராவிடர்கள் தமிழர் மீது திணித்த மூட நம்பிக்கையான கறுப்புச் சட்டையை தமிழர்கள் கிழித்து எரிந்து தீ மூட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு
இனியும் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து தமிழர்களையும், தமிழர் பண்பாட்டிலும் தலையிட்டால் திராவிட அமைப்புகள், காட்சிகளுக்கு எதிரான பெரும் போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுப்பார்கள் எந்த செய்தியும் இப்போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
கலாச்சார சீரழிவு
திராவிடர்களின் பண்பாட்டை தமிழர்கள் மீது திணிப்பதை இனி தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. புத்தாண்டு தினமான நேற்று ஒரு பக்கம் தாலி அகற்றும் நிகழ்வு மறுபக்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள் என சென்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.