டாஸ்மாக் எதிரான போராட்டத்தில் போலீசார் அடாவடி.. அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கும்... தமிழிசை கண்டனம்
மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து பல மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போலீசார் திடீரென போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இந்தத் தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பெண்களை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓங்கி கன்னத்தில் அடித்து விரட்டியடித்தார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறிய தமிழிசை அதிமுக ஆட்சியில் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு போலீஸ் தாக்குதல் சாட்சியாகும் என்று கூறினார்.
மேலும், டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ரேஷன் கடைகளை அதிகமாக திறக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது மதுக்கடையை மூடுவதால் ஏற்படும் வருவாயை சரி கட்டலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.