பெண்ணை வெறித்தனமாய் தாக்கிய போலீசை கண்டித்து உண்ணாவிரதம்... தமிழிசை நேரில் சென்று ஆதரவு
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை கண்டித்து இன்று உண்ணாவிரதம் போராட்டம் திருப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழிசை கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்
திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர்.
போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
கண்டனம்
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யக் கோரியும் சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.
தமிழிசை ஆதரவு
போலீஸ் தடியடியை கண்டித்தும் மீண்டும் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று உறுதியோடும் இன்று பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
ஆறுதல்
அப்போது, நேற்று போலீஸ் தடியடியில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல் கூறினார். அப்போது ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு கண்டனங்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.