தாகம் தீர்க்க தர்பூசணி… பப்பாளி… ஆரஞ்சு… அம்மா வாட்டர்…. வெயிலை விரட்டியடிக்கும் அதிமுகவினர்
சென்னை: வெயில் காலம் வந்துவிட்டது... ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறந்து மக்களின் தாகம் தீருங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் உத்தரவு போட்டாலும் போட்டார் தண்ணீர் என்ன தாகம் தீர்க்க தர்பூசணி தருகிறோம் என்று கிளம்பிவிட்டனர் அதிமுகவினர்.
சென்னை, மதுரை, வேலூர் என தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் இல்லை இல்லை பழப்பந்தல்களை திறந்துள்ளனர் அதிமுகவினர். அதில் வெயிலுக்கு இதமாக ஆரஞ்சு, தர்பூசணி, வெள்ளரிக்காய் பப்பாளி என கொடுப்பதோடு கூடவே அம்மா வாட்டர் பாட்டிலும் கொடுக்கின்றனர்.
நீர்மோர் பந்தல்
தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் உடனடியாக ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை திறந்து மக்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
இளநீர்… வெள்ளரி
குடிநீர் மற்றும் நீர் மோர் அல்லாமல், தர்பூசணி, வெள்ளரி, இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றையும் அதிமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அமைச்சர் வளர்மதி
சென்னை சைதாபேட்டை அரங்கநாதன் பாலம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் பா.வளர்மதி பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
கோட்டூர்புரத்தில்
கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தல்களை, அமைச்சர் திருமதி. பா. வளர்மதி திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், பழங்கள், மோர் போன்றவற்றை வழங்கினார்.
ஆயிரம்விளக்கில்
இதே போல சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள முத்தையா முதலி தெரு மற்றும் வள்ளூவர் கோட்டம் அருகிலும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். இதில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன், கவுன்சிலர் சிவராஜ் வட்டசெயலாளர்கள் பச்சையப்பன், பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கோகுல இந்திரா
இதேபோல அமைச்சர் கோகுல இந்திராவும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களையும் வழங்கினார்.
நீர்மோர்
பழங்கள் வகை வகையாய் இருந்தாலும்... கொதிக்கிற வெயிலுக்கு ஒரு கப் நீர் மோர் குடிச்சாதான் இதமாக இருக்கும் என்று நினைக்கும் மக்களுக்கு குடம் குடமாய் நீர் மோர் ஊற்றி தாகம் தீர்த்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன்.
தினசரி கிடைக்குமா?
இந்த பழங்கள்... இளநீர், நீர்மோர் எல்லாம் தினசரி கிடைக்குமா என்றுதானே கேட்கிறீர்கள்? அதுதான் இல்லை... இது திறப்பு விழா நாளில் மட்டும்தான்... அப்புறம் நீர்மோரும், தண்ணீரும் கிடைக்கும்... அப்புறம் மண்பானையில் வெறும் தண்ணீர் மட்டும் இருக்கும்... கொஞ்சாள் போனால் கொட்டகை கூட இருக்காது... அனலடிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் வெறும் பானையை பார்த்துவிட்டு வரலாம் என்கின்றனர் அனுபவசாலிகள்.