ஜெயிச்சா... சவால் விடும் அமமுக.. என்ன செய்யப் போகிறது அதிமுக!
அதிமுகவுக்கு தங்கதமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: அமமுக-விலிருந்து அதிமுகவுக்கு புதிதாக ஒரு சவால் வந்துள்ளது.
திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் கொஞ்ச நாளில் இடைதேர்தல் நடைபெற போகிறது. இதற்காக அதிமுக, திமுக தரப்பினரைவிட அதிகமாக ரவுண்டு கட்டி வேலை பார்ப்பது தினகரன் தரப்பு ஆட்கள்தான்.
லேசான பீதி
குறிப்பாக திருவாரூரில் ஜெயித்தே விடுவது என்ற கங்கணத்தில் ஆட்களை இறக்கி விட்டுள்ளார். வாக்காளர்களை சேர்ப்பது, பிரதான சுவர்களை பிடித்து குக்கர்களை வரைவது, போஸ்டர் அடித்து ஒட்டுவது என்று பம்பரமாக சுற்றி களத்தில் இறங்கி தேர்தல் வேலையை அமமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த ஜரூர் வேலையை பார்த்து அதிமுக, திமுக தொண்டர்களிடையே லேசான பீதிகூட ஏற்பட்டுள்ளது.
வெற்றி எங்களுக்கே
இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான மறைந்த மூக்கையா தேவரின் 39-வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டிக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன், மூக்கையா தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, வழக்கமான நம்பிக்கையுடன், "திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றிபெறப் போகிறோம்" என்றார்.
சவாலுக்கு தயாரா?
பிறகு, "ஆனால் அப்படி வெற்றி பெற்றுவிட்டால் அதன்பிறகாவது அதிமுகவினர் மனம் திருந்த வேண்டும், பிறகு அ.தி.மு.கவையும், கட்சி சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும், ஒருவேளை நாங்கள் தோற்றுவிட்டால், அதாவது அவங்க ஜெயித்துவிட்டால், நாங்கள் அவர்களுடன் இணைந்துகொள்கிறோம். ஆனால், நாங்கள் வெற்றிபெற்றால் அவர்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்களா? இந்த சவாலுக்கு அவர்கள் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்"
நூல்விடுகிறாரா?
இதன்மூலம் ஒன்று தெரிகிறது. ஜெயித்தால் கட்சி, இலையை கொடுத்துவிட வேண்டும் என்கிறார் சரி, தாங்கள் தோற்றுவிட்டால் அதிமுகவில் சேர்ந்து கொள்கிறோம் என்கிறாரே... இவ்வளவு சவால்விட்ட பிறகும் அங்கு சேர்ப்பார்களா? அதிமுகவில் சேர்ந்து கொள்கிறோம் என்று சொல்ல காரணம் பயமா? நம்பிக்கையா? அல்லது இப்போதே இணைந்து கொள்ள சவால் என்ற பெயரில் நூல் விட்டுபார்க்கிறாரா? ஒன்றும் விளங்கவில்லையே!!