அதிமுகவில் சேர தங்கதமிழ்ச்செல்வன் தூதுவிட்டு கொண்டிருக்கிறார்.. அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி
அதிமுகவில் சேர தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிட்டுக்கொண்டிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: அதிமுகவில் சேர தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிட்டுக்கொண்டிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் அதிமுக அரசை ஊழல் அரசு என்றும் இந்த அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் விளாசி வருகிறார். அவரது தீவிர ஆதரவாளரான ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வனும் கிடைக்கும் இடத்தில் எல்லாம் தமிழக ஆட்சியாளர்களை விளாசி வருகின்றார்.
அது ஒருபுறம் இருக்க அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரனின் அமமுகதான் வெற்றி பெறும் ஆளும் அதிமுகவுக்கு சவால் விடுத்து வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
அமைச்சர் பதிலடி
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரனுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
போராட்டங்களுக்கு அனுமதி
அவர் பேசியதாவது, ஊழல் பற்றி ஆதாரம் இருந்தால், டிடிவி தினகரன் சட்டசபையில் பேசலாம். தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. ஜனநாயக ரீதியாக கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டங்கள் நடத்தவும் இந்த அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அமைதி பூங்காவாக உள்ளது
தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி கொண்டு வந்தபோது எந்த மாநில அரசையும் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. எந்த பொருளையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது மத்திய அரசிடம்தான் உள்ளது.
பழிபோடுகிறது மத்திய அரசு
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிர்ப்பினை சமாளிக்க முடியாமல் மாநில அரசுகள் மீது மத்திய அரசு பழி போடுகிறது.
தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுகிறார்
தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் சேருவதற்கு தூது விட்டு கொண்டு இருக்கிறார். இங்கிருந்து சரியான பதில் இல்லை. எனவே அதிமுகவில் சேருவதற்கான காரணத்தை அவர் தேடுகிறார்.
சேர வழி தேடுகிறார்
அதனால்தான் தேர்தல் குறித்து சவால் விடுத்து அதில் தோற்கும்போது தானாகவே அதிமுகவில் சேர வழி தேடுகிறார். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.