தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் அவசியம் தேவை - கே.வி.தங்கபாலு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான தங்கபாலு தெரிவித்துள்ளார்.
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, வந்தவாசி கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், வசந்தகுமார், டாக்டர் செல்லகுமார் ஆகியோர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பு குறித்து தங்கபாலு செய்தியாளர்களிடம், "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலை மற்றும் தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக எங்கள் விவாதம் அமைந்தது. தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும், அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நிலை குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துரைத்தோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு தகுந்த சூழல் இல்லை. அந்த நல்ல சூழலை ஏற்படுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும். அதற்கு தகுதியான, ஒழுக்கமான, காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது விசுவாசம் கொண்ட, காங்கிரஸ் தொண்டர்களை அரவணைக்கிற ஒரு தலைவர் வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையையும் அவரிடம் வைத்தோம்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியையும் இரு நாட்களுக்கு முன்பு சந்தித்து இதே கோரிக்கைகளை அவரிடம் விரிவாக விளக்கி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதற்கு சோனியா காந்தியின் பதிலென்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதை நான் இங்கு கூற முடியாது. காங்கிரஸ் கட்சியின் விசுவாசி ஒருவர் தலைவராக வருவார். தலைவரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்பது காங்கிரசின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான். காங்கிரஸ் தலைவர் என்பவர் கட்சியிலும், கட்சிக்கு வெளியிலும் கண்ணியமாக பேசவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.