தம்பித்துரை கோரிக்கையில் நியாயமே இல்லை.. சொல்வது தங்கபாலு
சேலம்: தேர்தல் ஆணையத்தால் மற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே பணியிடத்தில் அமர்த்த வேண்டும் என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை கோரிக்கை விடுத்திருப்பதில் நியாயம் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு கூறியுள்ளார.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது. தனது கடமையை ஆணையம் செய்துள்ளது. ஆனால், அதிகாரிகளை மாற்றக்கூடாது என்று அதிமுகவை சேர்ந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார். இதில் எந்த நியாயமும் இல்லை. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைத்துள்ளது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் 5 ஆண்டுகள் பட்ட கஷ்டமெல்லாம் திமுக ஆட்சியால் மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் ஏழை மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை மாணவர்கள் மிகுந்த பயன்பெறுவார்கள்.
மது விலக்கை, திமுக ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும், முதல் கையெழுத்தே மதுவிலக்குதான் என்றும் கருணாநிதி உறுதியாக கூறி உள்ளார். எனவே தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் அவர்.