வெளியில போய்ட்டு மறுபடியும் வந்தா பதவி தர மாட்டோம்.. தங்கபாலு வார்னிங்!
சேலம்: காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பி வருவோருக்கு பதவிகள் எதுவும் தரப்பட மாட்டாது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
வாசன் வெளியேறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கோஷ்டிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. புதிய தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் தலைவர் தங்கபாலு, சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியை யாராலும் பிளவுப்படுத்த முடியாது. சில நேரங்களில் சிலர் வருவார்கள், சிலர் போவார்கள், அதுபோல் தான் இப்போது நடந்துள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் காங்கிரசில் உள்ளனர். தமிழகத்தில் உண்மையான காங்கிரஸ் நாம் இருக்கும் இடம் தான்.
இனி காங்கிரஸ் விசுவாசிகளுக்குத்தான் பதவி. அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்பவர்களுக்குத்தான் பதவி. வெளியில் சென்று மீண்டும் வருபவர்களுக்கு பதவி கிடையாது. கட்சிக்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையை பெற்று தருவோம்.
தமிழக மக்களின் எதிர்காலத்திற்கு தேவையான ஆக்கபூர்வமான பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபடுவார்கள். தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபடுவோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் மீண்டும் காமராஜ் ஆட்சி ஏற்பட உழைப்போம் என்றார் தங்கபாலு.