ஜல்லிக்கட்டை நடத்த முடியாத அரசாங்கம் யாருக்காக இனி இயங்க வேண்டும்? தங்கர் பச்சான் கொந்தளிப்பு
ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு இயக்குநர் தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த முடியாத கட்சிகளும், அரசாங்கமும் யாருக்காக இனி இயங்க வேண்டும்? என இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தங்கர் பச்சான் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:
நிலை கொள்ளாமல் தமிழ் இளைஞர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழக கட்சிகள் தனித்தனியாக தங்களின் கடமையை முடித்துக்கொண்டன. தமிழக அரசு மத்திய அரசின்மேல் பழிபோட்டு ஒதுங்கிக்கொண்டது.
தமிழர்களின் உரிமைக்காகவும்,உணர்வுக்காகவும் மதிப்பளித்து ஒன்று சேர்ந்து மத்திய அரசை பணிய வைத்து ஜல்லிக்கட்டை நடத்த முடியாத கட்சிகளும்,அரசாங்கமும் யாருக்காக இனி இயங்க வேண்டும்?
இளைஞர்களிடத்தில் உருவாகி இருக்கின்ற புதிய "தீ" பற்றி யாருக்கும் புரியவில்லை. இரண்டு நாளில் அடங்கிப்போய்விடும் என எப்பொழுதும்போல் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் தமிழினம் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் துரோகிகள் யார் யார் என்பதை உணரத்தொடங்கியிருக்கிறது.
இனி எதற்காக எங்களுக்கு இந்த சட்டமன்ற,நாடாளுமன்ற (MLA,MP) உறுப்பினர்கள்? மக்களுக்காகத்தான் என்றால் அனைத்து கட்சிகளும்,அனைத்து உறுப்பினர்களும் இன்றே,இப்பொழுதே ஒன்று கூடி நடவடிக்கையில் இறங்கி ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டுங்கள். முடியாது என்றால் கட்சிகளை கலைத்துவிட்டு பதவியிலிருந்து விலகுங்கள். பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு தமிழனின் குரலும் இதுதான்! செய்வீர்களா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.