அரசியல் பிழைப்புவாதிகள் என்றுமே மாற மாட்டார்கள்.. தங்கர் பச்சான் பாய்ச்சல்
சென்னை: அரசியல் பிழைப்புவாதிகள் என்றுமே மாற மாட்டார்கள். மக்களாகிய நாம்தான் மாற வேண்டும் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
தொடர்ந்து இதைத்தான் சொல்லிக்கொண்டு வருகிறேன். இந்த சீர்கெட்ட அரசியல் நிலை குறித்து கவலைப்படும் அனைவருமே செய்ய வேண்டியது இதைத்தான். அரசியல் பிழைப்பு வாதிகள் என்றுமே மாற மாட்டார்கள். மக்களாகிய நாம்தான் மாற வேண்டும்.
நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ளவர்கள் செய்த தவறால்தான் இந்நிலை. நம் குடும்பத்திலுள்ளவர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியை தொடர்ந்து ஏற்படுத்தி, வாக்கு செலுத்த அரசியல் பிழைப்புவாதிகளிடம் பணம் வாங்காமல் பார்த்துக் கொண்டாலே நல்லாட்சி கிடைக்கும்.
இப்படி ஒரு அருவருப்பான அரசியல் நிலை வந்ததால்தான் இன்று ஒவ்வொருவரும் கொதித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் கேவலமான நிலைக்கு செல்ல செல்லத்தான் மக்களுக்கு அரசியல் தெளிவு கிடைக்கும். என்னைப்பொறுத்தவரை நடக்கும் செயலெல்லாம் நல்லதற்கே!
தமிழக மக்களிடத்தில் கன்று கொண்டிருக்கும் அரசியல் தீ எதிர்காலத்தில் நமக்கு நல்ல தலைவர்களை கட்டாயம் பெற்றுத்தரும் என்று அவர் கூறியுள்ளார்.