11 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் நீதித் துறை சரியாக செயல்படவில்லை... தங்கதமிழ் செல்வன்
11 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் நீதித் துறை சரியாக செயல்படவில்லை என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.
Recommended Video
ஆண்டிப்பட்டி: 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு விவகாரத்தில் நீதித்துறை சரியாக செயல்படவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடிக்கு எதிராக அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்ததாக தினகரன் அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றவுடன் அவர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
எனவே 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்க செய்ய வேண்டும் என்று தினகரன் தரப்பிலும் திமுக தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வந்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 11 எம்எல்ஏக்களும் அந்த பதவியில் தொடரலாம் என தீர்ப்பு வழங்கினார். ஆனால் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
விரைவில் தீர்ப்பு
இதுகுறித்து தங்கதமிழ் செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரவேண்டும். ஏனெனில், வாக்களித்த மக்களுக்கு நாங்கள் நல்லது செய்ய வேண்டும். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்.
விளக்கம்
அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நாங்கள் சபாநாயகரிடம் புகார் செய்தோம். இதுதொடர்பாக சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் விளக்கமளிக்க சபாநாயகர் வரவில்லை. சபாநாயகரை விளக்கம் கேட்டு அழைத்ததை கூட நீதிபதி தீர்ப்பில் கூறவில்லை.
விசாரணை சரியில்லை
இதையெல்லாம் பார்க்கும்போது தான், நீதித்துறை மீது எங்களுக்கு சந்தேகம் வருகிறது. சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்ட குட்கா வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை என்று, முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் கூறியிருக்கிறார். நாங்களும் இதைத்தான் சொன்னோம்.
சட்டமும் தேவையில்லையே
கட்சிதாவல் தடை சட்டத்தில் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் எதற்காக கட்சி தாவல் தடை சட்டம்? இந்த சட்டமே தேவையில்லையே? மத்திய அரசு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, எங்களுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடியை கொடுத்து வருகிறது என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.