வெல்லப் போவது யார்? அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று 'ரிசல்ட்'
தஞ்சை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சென்னை: தேர்தல்கள் நடைபெற்ற தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மறுதேர்தலும் திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகியவற்றில் இடைத்தேர்தலும் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் அதிமுக, திமுக- காங்கிரஸ், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
மக்கள் நலக் கூட்டணி, பாமக, தமாகா ஆகியவை இத்தேர்தலை புறக்கணித்தன. கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 82% வாக்குகள் பதிவாயின.
அதற்கு அடுத்தப்படியாக திருப்பரங்குன்றத்தில் 71.04% வாக்குகளும், தஞ்சையில்69.02% வாக்குகளும் பதிவாகியிருந்தன. புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் மிக மிக அதிகபட்சமாக 85.76% வாக்குகள் பதிவாகின.
இங்கு காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிட்டனர். 4 தொகுதி தேர்தல்களும் பொதுவாக அமைதியாக நடைபெற்றாலும் சில இடங்களில் சலசலப்பும் பதற்றமும் இருந்தது.
வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கும். காலை 10 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்றும் பிற்பகலுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.