தஞ்சையில் 100 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புதுத் தேரில், பெருவுடையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், பக்தி பரவசத்தோடு தேரை வடம்பிடித்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரானது நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. தேரோட்டத்தையொட்டி தஞ்சாவூரில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பிரகதீஷ்வரர் ஆலயத்தில் தேர் திருவிழா கோவில் கட்டப்பட்டக் காலமான ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை ராஜவீதிகளில் தேர் வலம் வந்துள்ளதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் காலப்போக்கில் தேரோட்டம் நின்ற நிலையில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் மீண்டும் தேரோட்டம் நடைபெற்று மீண்டும் நாளடைவில் நின்று போய்விட்டது.
இந்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்பு மிக்க இந்த தேரோட்டம் இன்று 29-04-15 புதன்கிழமை ராஜவீதிகளில் வலம் வந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சையில் திரண்டனர்.
ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தேர் சுமார் 50 அடி உயரம், தேரின் முகப்பில் தஞ்சை பெரியகோவிலின் முழு சிற்பங்கள் மரத்திலே செதுக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த தேரில் பெருவுடையார், பெரிய நாயகி, விநாயகர் உள்ளிட்டத் தெய்வங்களின் சிற்பங்கள், 231 பொம்மைகள், 245 மணிகள் என பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தேர் சித்திரைப் பெருவிழாவின் 15 நாளான இன்று நடைபெற்றது. நான்கு மாட வீதிகளிலும் ஆடி அசைந்து வலம் வந்த தேரினை நூற்றுக்கணக்கானோர் கண்டு தரிசனம் செய்தனர்.