ரூ.75,000 லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது - வீட்டில் ரெய்டு
காலி மனைக்கு வரிக்குறைப்பு செய்ய ரூ.75,000 லஞ்சம் வாங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வரதராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்: வரிகுறைப்பு செய்வதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வரதராஜ் ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். வரதராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக வரதராஜன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கீழவஸ்தாசாவடி பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற ஊழியர் சம்பந்தம் என்பவருக்கு தஞ்சாவூரின் மையப்பகுதியில் 15 ஆயிரம் சதுர அடியில் காலி மனை உள்ளது.
இந்த மனைக்கு வரி செலுத்துவதற்காக பலமுறை மாநகராட்சி அலுவலகத்திற்கு சம்பந்தம் சென்றுள்ளார். ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் தொடர்ந்து அலைக்கழித்ததால் உரிய நேரத்தில் வரியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வரி செலுத்த உதவுமாறு இடைத்தரகர் நாகராஜ் என்பவரை அணுகி உள்ளார். ஆணையருக்கு ரூ. 75,000 லஞ்சம் கொடுத்தால் வரியை குறைத்து மதிப்பிட்டு தருவார் என நாகராஜன் சம்பந்தம் அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து சம்பந்தம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஆணையர் வரதராஜனுக்கு லஞ்சம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இடைத்தரகர், ஆணையர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, பாதாள சாக்கடை பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றை உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில் மாநகராட்சியால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடை உரிமம் ரத்து, நீதிமன்ற நடவடிக்கை ஆகியவை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் வரதராஜ் எச்சரித்திருந்தார்.
இதுவரை யார் யாரிடம் வரதராஜ் லஞ்சம் பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆணையர் வரதராஜ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.